ஓர் புதிய சமூக – பொருளாதார ஒழுங்கமைவை எதிர் நோக்குதல்

ஓர் புதிய சமூக – பொருளாதார ஒழுங்கமைவை எதிர் நோக்குதல்

அறிமுகம்

1947இல் இந்தியா விடுதலையடைந்தபோது நாட்டின் பொருளாதாரம் மிகவும் வலுவற்றதாகவும் பல பிரச்சனைகளையும் எதிர்கொண்டது. வறுமையின் அளவு மிக அதிகமாக இருந்தது. மக்கள் தொகையில் ஏறத்தாழ 80 விழுக்காட்டினர் கிராமப்புறங்களில் வாழ்ந்ததோடு தங்கள் வாழ்வாதாரத்திற்காக அவர்கள் வேளாண்மையைச் சார்ந்திருந்தனர். ஆங்கிலேயர் ஆட்சியின் போது கைவினைத் தொழில்கள் பெரும் பாதிப்புகளுக்கு உள்ளாகியதால் திறமைமிக்க கைவினைஞர்கள் பலர் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்தனர். இதன் விளைவாக வேளாண் துறையில் மக்கள் நெருக்கடி அதிகமானதோடு, வேளாண்மையிலிருந்து பெறப்படும் தனிநபரின் தலாவருமானமும் குறைந்தது. நில உடைமையாளர்கள் மற்றும் பயிரிடுவோர் அல்லது விவசாயிகளுக்குமிடையே நிலவிய நிலப்பிரபுத்துவ பிணைப்பு வேளாண்மையின் இயல்பாக இருந்தது. இவ்விவசாயிகள் நிலவுடைமை வர்க்கத்தாரால் சுரண்டப்பட்டனர்.

விடுதலைக்கு முந்தைய பதிற்றாண்டுகளில் தொழில்துறை வளர்ச்சியடைந்திருந்தது. ஆனால் அது மிக குறைவானதாகவே இருந்தது. டாட்டா இரும்பு எஃகுத் தொழிற்சாலை மட்டுமே நன்கறியப்பட்ட கனரக தொழிற்சாலையாகும். இதுதவிர பருத்தி நூல் நூற்றல், நெய்தல், வேதிப்பொருட்கள், காகிதம், சர்க்கரை, சணல், சிமெண்ட் ஆகியவை முக்கிய உற்பத்திப் பொருட்களாக இருந்தன. இத்தொழில்களுக்குத் தேவையான இயந்திரங்களைப் பொறியியல் துறை தயாரித்துக் கொடுத்தது. இருந்தபோதிலும் இத்துறை சிறியதாக இருந்ததோடு வேளாண்துறையில் தேவைக்கு அதிகமாக இருந்த தொழிலாளர்களுக்கு குறிப்பிடத்தக்க வேலைவாய்ப்பை வழங்கும் வலுவையும் பெற்றிருக்கவில்லை. உண்மையில் 1950இல் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தொழில் துறையின் பங்கு 13 விழுக்காடுகளாகவே இருந்தது. நுகர்வுக்கான உற்பத்திப் பொருட்களில் பெரும்பாலானவை இறக்குமதி செய்யப்பட்டன. இந்தியாவில் இருந்த அந்நிய நாட்டு நிறுவனங்களின் அலுவலகங்கள் சந்தைப்படுத்துதல், விற்பனை ஆகியவற்றில் மட்டுமே ஈடுபட்டதேயன்றி உற்பத்தியில் ஈடுபடவில்லை.

இவ்வாறாக புதிய இந்திய அரசு பொருளாதாரத்தை வளர்த்தல், வேளாண்துறை நிலைமைகளை மேம்படுத்துதல், உற்பத்தித் துறையை விரிவாக்கம் செய்தல், வேலைவாய்ப்புகளைப் பெருக்குதல், வறுமையைக் குறைத்தல் போன்ற மாபெரும் கடமைகளை எதிர்கொண்டது.

சமதர்ம பாணியிலான சமூகம்

பொருளாதார வளர்ச்சியைப் பல வழிகளில் அடையலாம். சுதந்திரமான செயல்பாட்டு முறையைப் பின்பற்றுவது ஒரு முறையாகும்; அதுவே முதலாளித்துவப் பாதையாகும். மற்றொன்று சமதர்மப் பாதையைப் பின்பற்றுவதாகும். இந்தியா இரண்டாவது பாதையைத் தேர்வுசெய்தது. முந்தைய பாடத்தில் கூறியவாறு, இந்திய அரசியலமைப்பின் முகவுரையில் இந்தியா ஒரு இறையாண்மை உடைய, சமதர்ம, மக்களாட்சி குடியரசு என தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. சமதர்ம பாணியிலான வளர்ச்சியின் நோக்கங்கள் : ஏற்றதாழ்வுகளைக் குறைப்பது, சுரண்டலை ஒழிப்பது, செல்வம் ஓரிடத்தில் குவிக்கப்படுவதைத் தடுப்பது ஆகியனவாகும். சமூகநீதியானது அனைத்து குடிமக்களும் கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் சமவாய்ப்பைப் பெறுவதாகும். இது முக்கியமாக வளர்ச்சி தொடர்பான செயல்பாடுகளில் அரசின் செயல்திறன்மிக்க பங்கேற்பை இன்றியமையாததாக ஆக்குகிறது.

வேளாண்மையில் சமூக மற்றும் பொருளாதார நீதியானது விவசாயிகளுக்கு அதிகாரம் அளிக்கும் நிலச் சீர்திருத்தச் செயல்பாடுகள் மூலம் அடையப்படுதல் வேண்டும். தொழில் துறையில் அரசு பொதுத்துறையின் கீழ் முக்கியத் தொழில்களை உருவாக்குவதில் செயல்திறன் மிக்க பங்கை வகிக்கும். ஐந்தாண்டு திட்டங்களின் கீழ், இவையனைத்தையும் உள்ளடக்கிய முழுமையான திட்டமிடல் மூலமே சாதிக்க வேண்டும். இச்செயல் திட்டங்கள் சோவியத் ஒன்றியத்தின் விரைவான பொருளாதார வளர்ச்சி அனுபவங்களிலிருந்து பெறப்பட்டன. விரைவான வளர்ச்சியில் சோவியத் ஒன்றியம் பெற்ற வெற்றியை கண்டு நேரு வியந்தார், ஆகவே இச்செயல்பாட்டுத் திட்டத்தின், அடித்தளமாக இருந்த கருத்தியல் நேருவின் சமதர்மம் எனக் குறிப்பிடப்படுகிறது.

வேளாண் கொள்கை

சுதந்திரம் பெற்றபோது இந்தியாவில் வேளாண்மையானது பல பிரச்சனைகளால் சூழப்பெற்றிருந்தது. பொதுவாக உற்பத்தி குறைவானதாக இருந்தது. மொத்த உணவு தானிய உற்பத்தி நாட்டுமக்கள் அனைவருக்கும் உணவளிக்கப் போதுமானதாக இல்லை. இதனால் அதிக அளவிலான உணவு தானியங்களை இறக்குமதி செய்ய வேண்டியதிருந்தது. மொத்த மக்கள் தொகையில் 80 விழுக்காட்டினர் தங்கள் வாழ்வாதாரத்திற்கு வேளாண்மையைச் சார்ந்திருந்தனர். இந்நிலை தானாகவே தனிநபரின் வருமானத்தை மிகவும் குறைந்த நிலைக்குக் கொண்டு சென்றது. இத்தகைய சூழல் மறைமுக வேலையின்மை ” என அழைக்கப்படுகிறது. அதாவது மக்களில் பலர் வேறு தொழில்களுக்கு மாறி சென்றுவிட்டாலும் மொத்த உற்பத்தி அளவு மாறாமல் இருப்பதோடு வேளாண் பணிகளைத் தொடர்ந்து செய்ய உபரியாக உள்ள பணியாளர்கள் உண்மையில் தேவையில்லை. ஆகவே அவர்கள் நடைமுறையில் வேலையற்றவர்களே. கிராமப்புற மக்களிடையே வறுமையின் அளவு மிகவும் அதிகமாக இருப்பதோடு அவர்களில் பெரும்பாலானோர் வட்டிக்குக் கடன் கொடுப்போரிடம் பெருமளவு கடன் பட்டிருந்தனர்.

வேளாண்மையின் பின்தங்கிய நிலையை இரு காரணிகளோடு தொடர்புபடுத்திப் பார்க்கலாம். ஒன்று நிறுவன அடிப்படையிலானது, மற்றொன்று தொழில்நுட்பம் சார்ந்தது. நிறுவனம் சார்ந்த காரணிகள் என்பது, நிலவுடைமை வர்க்கத்தை சேர்ந்தோருக்கும் விவசாயத் தொழிலாளர் வர்க்கத்தைச் சேர்ந்தோருக்குமிடையே நிலவிய சமூக பொருளாதார உறவுகளைக் குறிப்பதாகும். தொழில்நுட்பக் காரணிகள் என்பது சிறந்த விதைகள், மேம்படுத்தப்பட்ட வேளாண்மை முறைகள், ரசாயன உரங்களைப் பயன்படுத்துதல், டிராக்டர் மற்றும் அறுவடை இயந்திரம் உள்ளிட்ட நீர்ப்பாசன வசதிகள் ஆகியவற்றோடு தொடர்புடையனவாகும். முதலில் நிறுவனம் சார்ந்த குறைகளைக் களைவது என முடிவெடுத்த அரசு, வேளாண் நிலைமைகளை மேம்படுத்துவதற்காக நிலச்சீர்திருத்தத் திட்ட நடவடிக்கைகளைத் தொடங்கியது. இந்நடவடிக்கைகள் குறித்து அரசு சில அடிப்படை அனுமானங்களைக் கொண்டிருந்தது. அவை: சமூக ரீதியாக ஒரு நியாயமான முறை உருவாக்கப்படும். அதன் பயனாக விவசாயிகள் வலிமை பெறுவதோடு நிலங்களின் உற்பத்தித் திறன் அதிகரிக்கும்.

நிலச்சீர்திருத்தங்கள் மற்றும் கிராமப்புற மறுசீரமைப்பு

இந்திய அரசியலமைப்பின்படி வேளாண்மை மாநில அரசுகளின் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. அதன்படி ஒவ்வொரு மாநிலமும் தனித்தனியாக நிலச்சீர்திருத்தங்கள் தொடர்பான சட்டங்களை இயற்றியாக வேண்டும். இவ்வாறு நிலச்சீர்திருத்தத்தின் அடிப்படை வடிவம் அனைத்து மாநிலங்களுக்கும் பொதுவாக இருந்தாலும், சில குறிப்பிட்ட வகைகள் சார்ந்த நிலச்சீர்திருத்தச் சட்டங்கள் இயற்றப்படுவதில் மாநிலங்களிடையே ஒரே சீரான தன்மையில்லை.

(அ) ஜமீன்தாரிமுறை ஒழிப்பு

நாடு விடுதலை பெறுவதற்கு முன்னரே, ஜமீன்தாரிமுறை ஒழிப்பு இந்திய தேசிய காங்கிரசினுடைய அறிக்கையின் ஒரு பகுதியாக இடம் பெற்றிருந்தது. ஜமீன்தாரி என்றால் என்ன? ஜமீன்தார்கள் என்போர் யார்? ஜமீன்தார் என்பவர் நிலவுடைமையாளர் வகுப்பைச் சேர்ந்தோராவர். ஆங்கிலேயர் ஆட்சியின் போது, நிரந்தர நிலவரித் திட்டத்தின் கீழ் இடைத்தரகர்களாக நியமிக்கப்பட்ட இவர்கள் நிலவரியை அரசுக்குச் செலுத்தி வந்தனர். இவர்கள் தங்கள் நிலங்களில் விவசாயம் செய்யும் விவசாயிகளிடமிருந்து குத்தகை வசூல் செய்து அரசுக்கு நிர்ணயம் செய்யப்பட்ட ஒரு தொகையை நிலவரியாக செலுத்தக் கடமைப்பட்டவர்கள் ஆவர். விவசாயிகளிடமிருந்து பெறப்படும் தொகைக்கு சட்டபூர்வமான வரம்பு இல்லையென்பதால் ஜமீன்தார்கள் பொதுவாக விவசாயிகளிடமிருந்து அதிக தொகையினை வசூலித்து அவர்களை வறிய நிலைக்கு உள்ளாக்கினர். பொதுமக்கள் கருத்தின்படி, ஜமீன்தார்கள் எனும் இவ்வகுப்பினர் நீதிநெறிமுறையற்றவர்கள், ஆடம்பர பிரியர்கள், பயனற்றவர்கள், சுயமாக சம்பாதிக்காத வருமானத்தில் வாழ்கின்றவர்கள் என்று கருதப்பட்டனர். அவர்களின் உரிமைகளை ஒழிப்பதும் நிலங்களை மீட்டு விவசாயிகளுக்குத் தருவதும் அரசின் ஒரு முக்கிய குறிக்கோளானது.

ஆங்கிலேயர்களால் மூன்று வகையான வருவாய் வசூல் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. வங்காளம் மற்றும் வடஇந்தியாவின் பெரும்பகுதிகளில் அறிமுகம் செய்யப்பட்ட நிரந்தர நிலவரித் திட்டத்தின் கீழ், நிலவரியை செலுத்தும் பொறுப்பு ஜமீன்தார்கள் எனப்படும் குத்தகைதாரர்களிடம் விடப்பட்டது. தென்னிந்தியாவில் ரயத்துவாரி (ரயத் என்றால் விவசாயி என்று பொருள்) முறையின் கீழ் விவசாயிகள் நிலவரியை நேரடியாக அரசாங்கத்திடம் செலுத்தினர். மூன்றாவது முறை நாட்டின் ஒரு சில இடங்களில் மட்டும் காணப்பட்ட மகல்வாரி முறை. இதில் நிலவரியைச் செலுத்துவது கிராமத்தின் கூட்டுப் பொறுப்பாகும்.

அரசியலமைப்பு உருவாக்கப்படுவதற்கு முன்பாகவே இந்தியாவின் பல மாகாணங்கள் ஜமீன்தாரி முறையை ஒழிக்கும் சட்டங்களை இயற்றின. 1949இல் உத்தரப்பிரதேசம், மத்திய பிரதேசம், பீகார், சென்னை , அஸ்ஸாம், பம்பாய் ஆகிய பகுதிகளில் இச்சட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. நிரந்தர நிலவரித் திட்டம் முதன் முதலில் அறிமுகமான வங்காளத்தில் 1955இல்தான் இச்சட்டம் இயற்றப்பட்டது. நிலங்கள் ஜமீன்தார்களிடமிருந்து எடுக்கப்பட்டு குத்தகைதாரர்களிடையே விநியோகம் செய்யப்பட்டது. மாநில சட்டமன்றங்கள் ஜமீன்தார்களுக்கு வழங்கப்படவேண்டிய இழப்பீட்டுத் தொகைகளையும் பரிந்துரை செய்தன.

நாட்டின் பல பகுதிகளைச் சேர்ந்த ஜமீன்தார்கள் ஜமீன் ஒழிப்பு சட்டங்களின் அரசியலமைப்பு சட்டபூர்வத் தன்மையை எதிர்த்து நீதிமன்றத்தை நாடினர். இதன் பின்னர் அரசு இரண்டு அரசியலமைப்புத் திருத்தங்களை நிறைவேற்றியது. 1951இல் முதல் திருத்தமும் 1955இல் நான்காவது திருத்தமும் மேற்கொள்ளப்பட்டன. இதன்படி ஜமீன்தார்கள் தங்களின் நிலங்கள் எடுத்துக் கொள்ளப்பட்டது குறித்தோ இழப்பீடு குறித்தோ கேள்வி கேட்கும் வாய்ப்பு இல்லாமல் போனது. முடிவில் ஜமீன்தாரிமுறை ஒழிப்பு 1956இல் நிறைவு பெற்றது. இது மிகவும் வெற்றிகரமான நிலச்சீர்திருத்தமாகும். இதன் மூலம் 30 லட்சம் குடியானவர்களும் குத்தகைதாரர்களும் 62 லட்சம் ஹெக்டேர் நிலங்களுக்கு உரிமையாளர்களாயினர். ஜமீன்தார்களுக்கு உண்மையாக வழங்கப்பட்ட மொத்த இழப்பீட்டுத் தொகை ரூ.16,420 லட்சங்களாகும். இது வழங்கப்பட வேண்டிய மொத்த இழப்பீட்டுத் தொகையில் நான்கில் ஒரு பங்கேயாகும்.

இருந்தபோதிலும் இச்சீர்திருத்தத்தின் மூலம் திட்டமிடப்பட்ட நோக்கங்களில் ஒரு சிறு பகுதியை மட்டுமே எட்ட முடிந்தது. இந்நிலங்கள் தங்களது தனிப்பட்ட விவசாயத்தின் கீழிருந்தன என உரிமை கொண்டாடி ஜமீன்தார்களால் குடியானவர்களை வெளியேற்றிவிட்டு நிலங்களை எடுத்துக்கொள்ள முடிந்தது. இவ்வாறு ஜமீன்தாரி என்னும் அமைப்பு கலைக்கப்பட்டு விட்டாலும் பல நிலவுடைமையாளர்கள் தொடர்ந்து பெருமளவிலான நிலங்களைத் தங்கள் வசம் வைத்திருந்தனர்.

(ஆ) குத்தகை சீர்திருத்தம்

இந்தியாவில் பயிரிடப்படும் மொத்த நிலத்தில் ஏறத்தாழ 50 விழுக்காட்டு நிலங்கள் குத்தகை முறையின் கீழிருந்தன. குத்தகை என்பது குறிப்பிட்ட நிபந்தனைகளின் கீழ் விவசாயிகளால் நில உரிமையாளரிடமிருந்து நிலத்தைக் குத்தகைக்குப் பெறும் ஏற்பாட்டைக் குறிப்பதாகும். அனைத்துக் குத்தகைதாரர்களும் நிலமில்லா விவசாயிகள் அல்லர். பல சிறிய நிலவுடைமையாளர்கள் ஏனைய நிலவுடைமையாளர்களால் குத்தகைக்கு விடப்படும் நிலங்களைக் கூடுதலாகப் பெற்று விவசாயம் செய்யவிரும்பினர். சில பணம்படைத்த நிலவுடைமையாளர்களும் கூடுதலாக நிலங்களைக் குத்தகைக்குப் பெற்று விவசாயம் செய்தனர். பொதுவாகக் குத்தகை என்பது பொருளாக, நிலத்தில் விளைந்த விளைச்சலில் குறிப்பிட்ட பங்காகப் பெறப்பட்டது.

பெரும் நிலஉடமையாளர்கள் நிலத்தை குத்தகைதாரர்களுக்கு குத்தகைக்கு விடுவது என்பதை சாதாரணமாக செய்துவந்தனர். வழக்கமாக குத்தகை ஏற்பாடுகள் நீண்ட காலத்திற்குத் தொடர்ந்தது. நிலத்தின் சொந்தக்காரரால் பெறப்பட்ட குத்தகையானது நிலத்தின் விளைச்சலில் 50 விழுக்காடாகவோ அல்லது அதற்கு அதிகமாகவோ இருந்தது. இது மிக அதிகமாகும். குத்தகை ஒரு வழக்கமான நடவடிக்கையாதலால் ஒப்பந்தங்கள் அரிதாகவே பதிவு செய்யப்பட்டன. இவ்வாறு நீண்டகாலக் குத்தகைதாரர்கள் அனைவருக்கும் குத்தகை உரிமைகள் ஒருபோதும் மறுக்கப்பட்டதில்லை . எனினும் குத்தகைதாரர்கள் குறுகியகால அவகாசத்தில் தாங்கள் வெளியேற்றப்படலாம் என்பதால் அவர்கள் எப்போதும் ஓரளவு நிச்சயமற்ற நிலைமையிலேயே வாழ்ந்தனர்.

குத்தகை சீர்திருத்தமானது இரண்டு குறிக்கோள்களுடன் மேற்கொள்ளப்பட்டது. நில உடைமையாளரிடமிருந்து விவசாயிகளைப் பாதுகாப்பதன் மூலம் அவர்களுக்கு அதிகாரமளிப்பது, மற்றொன்று நிலத்தின் பயன்பாட்டுத்தன்மையை மேம்படுத்துவது, குத்தகைமுறை திறனற்றது எனும் கருத்தின் அடிப்படையில் இரண்டாவது குறிக்கோள் அமைந்தது. நிலத்தை மேம்படுத்துவதற்காக அதில் முதலீடு செய்யவேண்டும் எனும் அக்கறை நில உடைமையாளருக்கு அரிதாகவே ஏற்படும். தங்கள் நிலங்களிலிருந்து வருமானத்தைப் பெறுவதில் மட்டுமே அவர்கள் ஆர்வமாய் இருந்தனர். நிலத்தின் மீது உரிமையில்லாத ஆனால் அதிகக் குத்தகை கொடுத்துக் கொண்டிருக்கும் குத்தகைதாரர்களுக்கும் அவ்வாறான அக்கறையில்லை . நிலத்தில் முதலீடு செய்யும் அளவிற்கு அவர்களிடம் உபரிப் பணமுமில்லை .

குத்தகை சீர்திருத்த சட்டங்கள் மூன்று இலக்குகளைக் குறிவைத்து இயற்றப்பட்டன.

(i) குத்தகையை முறைப்படுத்துவது.
(ii) குத்தகைதாரர்களின் உரிமைகளை பாதுகாப்பது.
(iii) நிலவுடைமையாளர்களிடமிருந்து நிலங்களைப் பறிமுதல் செய்து அவற்றிற்கான உரிமையை குத்தகைதாரர்களுக்கு அளிப்பது.

மாநிலங்களில் குத்தகை முறைப்படுத்தப்பட்டு விளைச்சலில் நான்கில் ஒரு பங்காக இருந்தது, மூன்றில் ஒரு பங்காக மாற்றப்பட்டு சட்டங்கள் இயற்றப்பட்டன. ஆனால் இது ஒருபோதும் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்படவில்லை. வேளாண்துறையில் தொழிலாளர்களின் எண்ணிக்கை உபரியாக இருக்கையில் நிலம் போதுமானதாக இல்லை. அளிப்பைக் காட்டிலும் தேவையின் அளவு அதிகமாக இருந்த சூழலில் விலைகளைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளால் பயனேதுமில்லை . மொத்தத்தில் அலுவலகப் பதிவுகள் எதுவுமில்லாமல் மறைமுகமாக குத்தகைத் தொகை உயர்த்தப்பட்டது.

குத்தகைதாரர்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும் குத்தகை உரிமையை மரபுரிமையாக்குவதற்கும் இயற்றப்பட்ட சட்டங்களும் வெற்றி பெறவில்லை. குத்தகை ஒப்பந்தங்கள் வாய்மொழியாகவே மேற்கொள்ளப்பட்டதோடு ஆவணங்களிலும் பதிவு செய்யப்படவில்லை . ஆகவே எந்த நேரத்திலும் நில உடைமையாளரால் தான் வெளியேற்றப்படலாம் என்ற அச்சத்திலேயே குத்தகைதாரர் வாழ நேர்ந்தது. குத்தகை சீர்திருத்தச் சட்டங்கள் அறிவிக்கப்பட்டபோது, பெரும்பாலான நிலவுடைமையாளர்கள் நிலங்களைத் திரும்பப் பெற்று சொந்தமாக விவசாயம் செய்வதாகவும் குத்தகைதாரர்கள் தங்கள் நிலங்களில் வேலை செய்யும் தொழிலாளர்களே என்றும் கூறினர். ஓரு முழுமையான நடைமுறைப்படுத்தக்கூடிய நில உச்சவரம்புத் திட்டம் இல்லாத சூழலில் குத்தகை சீர்திருத்தங்கள் பயனற்றுப் போயின.

கேரளா மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் நிலச்சீர்திருத்த நடவடிக்கைகள் குறிப்பிடத்தக்க வெற்றியடைந்தது. நிலப்பிரபுத்துவம் ஒழிக்கப்பட்டது. குறிப்பிடத்தக்க வகையில் வெற்றியைப் பெற்றாலும் குத்தகைதாரரை நிலத்தின் உரிமையாளராக ஆக்குவதற்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் கலவையான முடிவுகளைக் கொண்டிருந்தன.

(இ) நில உச்சவரம்பு

நில உச்சவரம்பு என்பது தனிநபர்கள் அதிகபட்சம் எவ்வளவு நிலங்களைச் சொந்தமாக வைத்துக்கொள்ளலாம் என்பதை குறிப்பிடுகின்றது. இதனை நடைமுறைப்படுத்த 1950களுக்குப் பின்னர் சட்டங்கள் இயற்றப்பட்டன. தமிழ்நாட்டில் முதன்முறையாக 1961இல் நடைமுறைப்படுத்தப்பட்டது. 1972 வரை ஒரு நில உரிமையாளர் எவ்வளவு நிலங்களைச் சொந்தமாக வைத்துக் கொள்ளலாம் என்பதற்கு உச்சவரம்பு நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. 1972க்குப் பின்னர் அடிப்படை அலகானது குடும்பம் என மாற்றப்பட்டது. இதனால் நில உரிமையாளர் தனது குடும்ப உறுப்பினர் ஒவ்வொருவரும் ஒரு குறிப்பிட்ட அளவு நிலங்களுக்கு உரிமையுடையவர்கள் என உரிமைகோர முடிந்தது. அந்நிலங்களின் அளவு நில உச்சவரம்பு நிர்ணயம் செய்த நிலத்தின் அளவைவிட மிகக் குறைவாகவே இருந்தது.

நிலத்தின் தரம் ஒரேமாதிரியாக இல்லாததால் நில உச்சவரம்புச் சட்டத்தின் கீழ் நிலங்களின் அளவை நிர்ணயம் செய்வது சிக்கல்கள் நிறைந்த பணியாக இருந்தது. நீர்ப்பாசன நிலங்கள், மானாவரி நிலங்கள், ஒருபோக நிலங்கள் மற்றும் இருபோக நிலங்கள் ஆகியனவற்றை வேறுபடுத்திப் பார்க்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அதே சமயத்தில் இச்சட்டத்தில் சிலவகையான நிலங்களுக்கு விதிவிலக்கும் அளிக்கப்படிருந்தன. அவையாவன, பழத்தோட்டங்கள், தோட்டங்கள் (காய்கறிகள், பூக்கள் விளையும் நிலங்கள்), மேய்ச்சல் நிலங்கள், அறக்கொடை, சமயம் சார்ந்த நிறுவனங்களுக்குச் சொந்தமான நிலங்கள், கரும்பு பயிரிடப்படும் பெருந்தோட்டங்கள் ஆகியவை இதில் அடங்கும். மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருக்க வேண்டிய இந்த சீர்திருத்தம் நில உச்சவரம்புச் சட்டத்தில் வழங்கப்பட்ட சில விதிவிலக்குகளை சிலர் பயன்படுத்திய விதம் குறித்தும் நில ஆவணங்கள் திருத்தம் குறித்தும் விமர்சனங்கள் எழுந்தன.

இறுதியில் 65 லட்சம் ஹெக்டேர் நிலம் மட்டுமே உபரி நிலமாக கையகப்படுத்தப்பட்டது. இந்நிலம் 55 லட்சம் குத்தகைதாரர்களுக்கு தலா ஒரு ஹெக்டேருக்கு சற்றே கூடுதலான நிலம் விநியோகம் செய்யப்பெற்றது.

வினோபா பாவே தனது பூமிதான இயக்கத்தின் (Boodhan Movement) மூலம் பெரும் நிலவுடைமையாளர்கள் தங்களிடம் உபரியாக உள்ள நிலங்களைத் தாங்களாவே முன்வந்து வழங்க இணங்க வைத்த முயற்சிகள் மக்களின் கவனத்தைப் பெரிதும் கவர்ந்தது.

(ஈ) ஒட்டுமொத்த மதிப்பீடு

ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில் நிலச்சீர்திருத்தச் சட்டம் மிகப்பெரும் வெற்றியைப் பெறவில்லை . பொருளாதாரரீதியாக, நில உரிமையையும்பாதுகாப்பையும் பெற்ற வேளாண் குடிமக்களின் கீழ் வேளாண்துறை செழித்தோங்கும் என்ற கனவு கனவாகவே இருந்தது. மேலும் உணரத்தக்க அளவில் செயல்திறனில் முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை. அண்மைக்காலங்களில் ஏற்பட்ட தொழில்நுட்ப வளர்ச்சியினால் வேளாண்மை முன்னேறியுள்ளதால் அதிகம் திறமை வாய்ந்த நிலச் சந்தை ஒன்று செயல்படுவதாகத் தெரிகிறது. அது நீண்டகால வளர்ச்சிக்கு ஏதுவாக இருக்கும்.

சமூகநீதி என்ற பரிமாணத்தில், நிலப் பிரபுத்துவ முறையான ஜமீன்தாரி முறை ஒழிக்கப்பட்டதால் நற்பயனை அளித்துள்ளது. நிலச்சீர்திருத்த நடவடிக்கைகள் விவசாயிகளை, தங்கள் உரிமைகள் குறித்த அரசியல் விழிப்புணர்வு பெற்றவர்களாக மாற்றியதோடு அவர்களை அதிகாரம் மிக்கவர்களாகவும் மாற்றியுள்ளது.

வேளாண்மையின் வளர்ச்சி

(அ) பசுமைப் புரட்சி

1960களின் இடைப்பகுதியில் இந்தியாவில் உணவு உற்பத்தியின் நிலை மிகவும் கவலையளிப்பதாக இருந்தது. உணவுப் பொருட்களை இறக்குமதி செய்வதற்காக நாடு மிகப் பெருமளவில் செலவு செய்தது. நிலச்சீர்திருத்தங்கள் விவசாய உற்பத்தியின் மீது எவ்விதத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. ஆகவே அரசு வேளாண்மையை மேம்படுத்த தொழில்நுட்பம் எனும் மாற்று வழிகளை நாடின. 1965இல் நீர்ப்பாசன வசதியுள்ள சில தேர்ந்தெடுக்கப் பகுதிகளில் அதிக மகசூலைத் தருகிற (உயர்ரக வீரிய வித்துகள் – HYV) கோதுமை, நெல் ஆகியன பயிரிடப்பட்டன.

மரபுசார்ந்த விவசாயத்தைப் போலல்லாமல், அதிக மகசூலைத் தருகிற விதை ரகங்களுக்கு அதிக நீரும் டிராக்டர் போன்ற இயந்திரங்களும் இரசாயன உரங்கள் மற்றும் பூச்சி கொல்லி மருந்துகள் ஆகியன தேவைப்பட்டன. தொடக்கத்தில் சோதனை முயற்சித் திட்டங்களில் கிடைத்த வெற்றியின் விளைவாக நாடு முழுவதும் அதிக விளைச்சலைத் தருகின்ற வீரிய விதைகள் பயன்படுத்தப்பட்டன. பொதுவாக இம்முயற்சி பசுமைப் புரட்சி என்றே குறிப்பிடப்படுகிறது. இம்முறையில் இரசாயன உரங்களுக்கும் பூச்சிகொல்லி மருந்துகளுக்குமான தேவை மிகப் பெருமளவுக்கு அதிகரித்தால் அவை தொடர்பான தொழிற்சாலைகளும் வளர்ச்சி பெற்றன.

இறுதியாக, இருபது ஆண்டுகளுக்குள்ளாகவே இந்தியா உணவுதானிய உற்பத்தியில் தன்னிறைவு பெற்றது. 1960-61இல் 35 மில்லியன் டன்களாக இருந்த மொத்த அரிசி உற்பத்தி 2011-12இல் 104 மில்லியன் டன்களாக உயர்ந்தது. இதே காலப்பகுதியில் கோதுமை உற்பத்தி 11 மில்லியன் டன்களிலிருந்து 94 மில்லியன் டன்களை எட்டியது. உற்பத்தித்திறனும் அதிகரித்தது. விவசாயிகளிடமிருந்த உபரி உணவு தானியங்களை விலைக்கு வாங்கிய அரசு பெருமளவிலான தானியக் கையிருப்பை ஏற்படுத்தி அவற்றை இந்திய உணவுக் கழகத்திற்குச் (Food Corporation of India – FCI) சொந்தமான சேமிப்புக் கிடங்குகளில் சேமித்து வைத்தது. இவ்வாறு சேமிக்கப்பட்ட உணவு தானியங்கள் பொது விநியோகத் திட்டத்தின் மூலம் (Public Distribution System – PDS) மக்க ளுக்குக் கிடைக்குமாறு செய்யப்பட்டு மக்களுக்கான உணவு பாதுகாப்பும் உறுதி செய்யப்பட்டது.

மற்றொரு சாதகமான அம்சம் யாதெனில் பால் மற்றும் முட்டை உற்பத்தியானது தொடர்ந்து அதிகரித்தது என்பதேயாகும். இதன் காரணமாக, அனைத்து வருமானக் குழுவினரின் உணவுப் பழக்கம் மேலும் பன்முகப்படுத்தப்பட்டது.

இந்தியாவில் உணவு உற்பத்தியை அதிகரிக்கச் செய்தது என்ற நிலையில் பசுமைப்புரட்சி மிகவும் வெற்றிகரமானதாக இருந்தபோதிலும், அது சில எதிர்மறையான விளைவுகளையும் ஏற்படுத்தியது. முதலாவதாக வசதி வாய்ப்புகள் நிறைந்த பகுதிகள், வசதி வாய்ப்புகள் குறைந்த பகுதிகள் ஆகியவற்றிற்கு இடையிலான ஏற்றதாழ்வுகளை அதிகரித்தது. காலப்போக்கில் விவசாயிகளிடையே அதிக அளவில் ரசாயன உரங்களையும் பூச்சிக் கொல்லி மருந்துகளையும் பயன்படுத்தும் பழக்கம் ஏற்பட்டதன் விளைவாகச் சூழலியல் பிரச்சனைகள் தோன்றலாயின. நாட்டின் பல பகுதிகளில் மீண்டும் இயற்கை விவசாயத்திற்குத் திரும்பும் மனநிலை ஏற்பட்டுள்ளது. ஒரு குறிப்பிட்ட விலை கொடுத்த பின்னரே வளர்ச்சி ஏற்படுகிறது என்பது கற்றுக் கொள்ள வேண்டிய பாடமாகும்.

(ஆ) ஊரக வளர்ச்சித் திட்டங்கள் (RDP)

1970களில் தொழில் துறையிலும் வேளாண்மையிலும் வளர்ச்சி ஏற்பட்ட பின்னரும் வறுமை குறையவில்லை. வறுமையெனும் பிரச்சனை வளர்ச்சியால் தீர்த்துவிடும் என்ற அனுமானம் நிறைவேறவில்லை. மேலும் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் ஏறத்தாழ சரிபாதியினர் வறுமைக்கோட்டுக்குக் கீழே வாழ்வதாகக் கண்டறியப்பட்டது (ஒரு மனிதர் உயிர் வாழ்வதற்கு தேவைப்படும் கலோரிகளை வழங்கும் உணவுப்பண்டங்களை வாங்குவதற்கு அவர் எவ்வளவு செலவு செய்கிறார் என்பதே வறுமைக் கோட்டுக்கான வரையறை). வறுமைக் கோட்டுக்கு கீழுள்ளவர்களின் விழுக்காடு உயரவில்லை , ஆனால் மக்கள் தொகை பெருகுவதால் வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் மக்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணமிருக்கிறது.

கிராமப்பகுதிகள், நகரப்பகுதிகள் ஆகிய இரண்டிலும் வறுமை நிலவுகிறது. ஆனால் மக்கள் தொகையில் நான்கில் மூன்று பகுதியினர் கிராமப்புறங்களில் வாழ்வதால் கிராமப்புற வறுமை மிகவும் நெருக்கடிமிகுந்த பிரச்சனையாய் இருக்கிறது, எனவே உடனடி கவனம் தேவைப்படுகிறது. சில குறிப்பிட்ட சமூகக் குழுக்களான சிறு மற்றும் குறு விவசாயிகள், நிலமற்ற தொழிலாளர்கள் மற்றும் வளம் குன்றிய நிலங்களிலிருந்த ஒடுக்கப்பட்ட பிரிவினர், நீர்ப்பாசன வசதிகள் மற்றும் வளமான நிலமில்லா பகுதி மக்கள் ஆகியோரிடையே வறுமையின் அளவு மிக அதிகமாக உள்ளது.

கிராமப்புற வறுமையைப் போக்குவதற்காக அரசாங்கத்தால் முழுவீச்சில் ஊரக வளர்ச்சித் திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டன. சமூக வளர்ச்சித் திட்டங்கள், பஞ்சாயத்து ராஜ் போன்ற உள்ளாட்சி நிறுவனங்களைப் புதுப்பிப்பது, சிறு குறு விவசாயிகளைப் போன்ற குறிப்பிட்ட குழுக்களை இலக்காகக் கொண்ட திட்டங்கள் ஆகியவை இதில் அடங்கும். கிராமப்புறக் குடும்பங்கள் விவசாயத்திலிருந்து பெறும் வருமானத்தை அதிகப்படுத்துவதற்கு வருமானத்திற்கான வேறு வழிகளை அமைத்துக் கொடுப்பதில் அதிக அக்கறை செலுத்தப்பட்டது. அவ்வாறான இரண்டு பெரும் திட்டங்கள் மிக விரிவாக கீழே விளக்கப்பட்டுள்ளன.

(இ) ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சித் திட்டம் (IRDP) 1980 – 1999

1980இல் ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சித் திட்டம் என்ற பெயரில் ஓர் ஒருமுகப்படுத்தப்பட்ட திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. கிராமப்புற குடும்பங்களின் பொருளாதார நிலையை உயர்த்துவதற்கு அவர்களுக்கு சில சொத்துக்களை வழங்குவது இத்திட்டத்தின் நோக்கமாகும். இதன் மூலம் அவர்கள் வறுமையிலிருந்து வெளியே வர இயலும். அது நிலத்தை மேம்படுத்துவதற்காகவோ, பால் உற்பத்திக்காகப் பசுக்கள் அல்லது ஆடுகளை வழங்குதல் அல்லது சிறிய கடைகள் வைக்கவோ அல்லது வேறு வணிகத் தொடர்பான வியாபாரங்கள் செய்வதற்கான உதவியாகவோ இருக்கலாம். நாட்டிலிருந்த 5011 ஊராட்சி ஒன்றியங்களிலும் இத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் இலக்கு ஐந்து ஆண்டுகளில் (1980-1985), ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திலும் ஆண்டொன்றுக்கு 600 குடும்பங்களுக்கு உதவிகள் வழங்குவது, இந்த உதவிகள் 15 மில்லியன் குடும்பங்களுக்கு சென்றடைவதை நோக்கமாகக் கொண்டிருந்தது.

இவ்வாறு வழங்கப்பட்ட மூலதன சொத்துகளுக்கான செலவு, மானியங்கள் மற்றும் கடன்கள் (மத்திய மற்றும் மாநில நிர்வாகம் தங்களுக்குள் சமமாகப் பகிர்ந்துகொள்கின்றன) ஆகியவை மூலம் ஈடு செய்யப்பட்டது. உதவியைப் பெறும் குடும்பத்தின் பொருளாதாரநிலைக்கு ஏற்றவாறு மானியங்களும் மாறுபட்டன. அவை சிறு விவசாயிகளுக்கு 25 விழுக்காடாகவும் குறு விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களுக்கு 33.3 விழுக்காடாகவும், பழங்குடியினர் குடும்பங்களுக்கு 50 விழுக்காடாகவும் இருந்தன. தேர்ந்தெடுக்கப்பட்ட விவசாயக் குடும்பங்களுக்கு வங்கிகள் கடன் கொடுத்ததன் வழியாக சொத்துக்கான மூலதனச் செலவின் மீதி சரி செய்யப்பட்டது. 1999ஆம் ஆண்டு வரையில் 53.5 மில்லியன் குடும்பங்களை இத்திட்டம் சென்றடைந்தது.

விவசாயக் குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட சொத்துக்களில் 50 விழுக்காடு கால்நடைகளாகவும் (பால் உற்பத்தி ) 25 விழுக்காடு விவசாயம் அல்லாத வேறு பணிகளுக்காகவும், 15 விழுக்காடு சிறிய அளவிலான நீர்ப்பாசனப் பணிகளுக்காகவும் விநியோகம் செய்யப்பட்டன. ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சித் திட்டத்தின் பணிகள் பல பொருளாதார நிபுணர்களாலும், அரசு அமைப்புகளாலும் மதிப்பிடப்பட்டன. இத்திட்டத்தின் இறுதி விளைவைப் பற்றி பல ஆய்வுகள் நடத்தப்பட்டன.

பயனாளிகளைத் தெரிவு செய்வதில் தெளிவான நடைமுறையில்லாதது, ஒவ்வொரு குடும்பத்திற்குமான முதலீடு குறைவாக இருந்தது, திட்டத்தை நடைமுறைப்படுத்திய காலத்திற்குப் பிந்தைய தணிக்கையில்லாதது, பிராந்திய அளவில் வறுமைக்கோட்டிற்கு மேலே கொண்டுவருவதற்கான பயனாளிகளை அடையாளம் காணுவதில் ஏற்றதாழ்வு ஆகியவை முக்கிய பிரச்சனைகளாக இருந்தன.

இத்திட்டத்தால் அடையப்பட்ட குறிப்பிடத்தக்க வெற்றியைக் கருத்தில் கொண்டு கிராமப்புற ஏழைகளின் சுய வேலைவாய்ப்பை மேம்படுத்துவதற்கான ஒரு திட்டமாக 1999இல் இது மறுசீரமைக்கப்பட்டது.

(ஈ) மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதிச் சட்டம், 2005 (MGNREGA)

இந்தியாவில் தொடர்ந்து பல ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட தீவிர முயற்சிகளின் காரணமாக, வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழும் குடும்பங்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது. அண்மைக் காலங்களில் விவசாயம் அல்லாத வேலைவாய்ப்புகளைப் பெருக்குவதன் மூலமாகவே  கிராமப்புற வறுமையை ஒழிக்க முடியும் என்பது பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. கடந்த பல ஆண்டுகளில் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்காகப் பல திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டன. அவைகளில் பல வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. நம் நாட்டில் இன்றைய அளவில் இத்துறையில் செயல்படும் மிகப்பெரிய திட்டம் இதுவேயாகும்.

தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதிச் சட்டமானது (பின்னர் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது), கிராமப்புற ஏழைக் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் நோக்கத்துடன் 2005இல் இயற்றப்பட்டது. ஒவ்வொரு குடும்பத்தைச் சேர்ந்த, வயது வந்த உறுப்பினர்களுக்கு தனித்திறனற்ற உடல் உழைப்பு, வேலையைச் செய்ய விருப்பம் உடையவர்களுக்கு, ஒவ்வொரு ஆண்டும் 100 நாட்களுக்கு ஊதியத்துடன் கூடிய வேலையைக் கொடுப்பதன் மூலமே இதை வெற்றிகரமாகச் செய்தது. ஒவ்வொரு வருடமும் மூன்று மாதங்களுக்கு வேளாண் பணிகள் இல்லாத காலங்களில் வேலை எதுவும் கிடைக்காமலிருக்கும் கிராமப்புறம் சார்ந்த ஏழைக் குடும்பங்களுக்கு இத்திட்டம் ஓரளவு உதவுவதாக இருக்கும். இம்முயற்சியின் கீழ் மேற்கொள்ளப்படும் பணிகள் கிராமப்புறங்களில் சாலைகள், கால்வாய்கள், சிறிய நீர்ப்பாசன வேலைகள், மரபு சார்ந்த நீர் நிலைகளை மீட்டெடுத்தல் போன்ற நீண்ட காலம் பயன்தரும் செல்வங்களை உருவாக்கும்.

இதற்கு முந்தைய, இலக்கு நிர்ணயம் செய்யப்பட்ட ஊரக வளர்ச்சித் திட்டங்கள் வறுமைக் கோட்டிற்குக் கீழ்வாழும் குடும்பங்களைக் கண்டறிதலை அடிப்படையாகக் கொண்டிருந்ததோடு தகுதி பெறாத குடும்பங்களும் தேர்வு செய்யப்பட்டதாக பல புகார்கள் எழுந்தன. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதிச் சட்டம் அனைத்து கிராமப்புற குடும்பங்களுக்கும் பொருந்தக் கூடியதாகும். ஏனெனில் இது சுய இலக்கு கொண்ட ஒரு திட்டம் என்பதோடு கல்வித்தகுதி உடையவர்களோ, வசதியான பின்புலத்தைக் கொண்டவர்களோ குறைந்தபட்ச ஊதியத்திற்கு உடல் உழைப்பு வேலை செய்ய முன்வர மாட்டார்கள்.

இதற்கு முந்தைய வேலைவாய்ப்புக்களை உருவாக்கும் திட்டங்களில் கிராமப்புற ஏழை மக்களுக்கு வேலையைக் கேட்டுப்பெறும் உரிமை தரப்படவில்லை. தங்களுக்கு வேலை வேண்டும் எனக் கேட்பதற்கு அவர்களுக்குச் சட்டபூர்வமான உரிமை தரப்பட்டதே இச்சட்டத்தின் குறிப்பிடத்தக்க அம்சமாகும். இத்திட்டம் கிராம பஞ்சாயத்துக்களால் நடைமுறைப்படுத்தப்படுகிறது. வேலை வேண்டுவோர் விண்ணப்பிக்க வேண்டும். அவர்களுக்கு வேலைக்கான அட்டை வழங்கப்படும். 15 நாட்களுக்குள்ளாக உள்ளாட்சித்துறை நிர்வாகிகள் அவர்களுக்கு வேலை வழங்க வேண்டும். இல்லையெனில் விண்ணப்பதாரர் வேலையில்லாதோருக்கான உதவித்தொகையைப் பெறுவதற்கு உரிமை உடையவராகிவிடுவார். வேலை நடைபெறும் இடமானது விண்ணப்பதாரரின் வீட்டிலிருந்து 5கிலோமீட்டர் தொலைவிற்குள் இருத்தல் வேண்டும்.

இப்பணியில் ஒப்பந்ததாரர்களை ஈடுபடுத்தக் கூடாது. இடைத்தரகர்கள் தங்களுக்கான லாபத்தை வேலை செய்வோரின் ஊதியத்திலிருந்து எடுத்துக் கொள்வதை தவிர்ப்பதற்காகவே இந்த ஏற்பாடு. வழங்கப்படும் ஊதியத்திற்கும் முதலீடு செய்யப்பட்ட மூலதனத்திற்குமான விகிதம் 60:40 ஆகும். வேலை செய்வோரில் மூன்றில் ஒரு பகுதியினர் பெண்களாக இருத்தல் வேண்டும். ஆண்கள் பெண்கள் இருவருக்கும் ஒரே மாதிரியான ஊதியம் வழங்கப்பட வேண்டும்.

மக்கள் நலத்திட்டங்களை முறையாக நடைமுறைப்படுத்துவது குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. நேர்மறையான அம்சங்கள் என எடுத்துக் கொண்டால், தொழிலாளியின் பேரம் பேசும் சக்தி அதிகரித்ததால் வேளாண் வேலைகளுக்கான ஊதியம் உயர்ந்தது. விவசாய வேலைகள் இல்லாத காலப்பகுதியிலும் வறட்சியின் போதும் விவசாயத் தொழிலாளர்கள் குடிபெயர்வது இதனால் குறைக்கப்பட்டது. பெண்கள் பெருமளவில் இவ்வேலைகளில் பங்கேற்றுக் கொண்டிருப்பதும், இத்திட்டம் அவர்களை அதிகாரமிக்கவர்களாக மாற்றியிருப்பதும் இத்திட்டத்தின் மிக முக்கியப் பயன்களாகும்.

வெளிப்படைத்தன்மை மற்றும் சிக்கலற்ற பரிமாற்றத்தை உறுதி செய்யும்பொருட்டு, தொழிலாளர்களுக்கான ஊதியம் அவர்களுடைய வங்கி அல்லது அஞ்சலகக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படுகிறது. குடிமைச் சமூக அமைப்புகள், தன்னார்வ நிறுவனங்கள் ஆகியவற்றின் ஈடுபாட்டினாலும் அரசியல் பிரதிநிதிகளின் ஈடுபாட்டினாலும் குடிமைப் பணியாளர்களின் அதிகப் பொறுப்பு மிகுந்த மனப்பான்மையினாலும், தமிழ்நாடு, ஆந்திரா, ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் இத்திட்டம் மிகச் சிறப்பாகச் செயல்படுகிறது. திட்டத்தின் செயல்பாட்டுத் திறன் 97 விழுக்காடு உயர்ந்துள்ளது.

இத்திட்டத்தின் கீழ் 2006 முதல் 2012 வரையிலுமான காலப்பகுதியில் ரூ. 1,10,000 கோடிகள் நேரடியாக ஊதியமாக விநியோகம் செய்யப்பட்டுள்ளது. 1200 கோடி மனித வேலை நாட்கள் உருவாக்கப்பட்டுள்ளது. பின்னடைவுகள் இருந்தபோதிலும் கிராமப்புற ஏழைகள் மற்றும் குடிமை சமூகத்தினிடையே இருந்த உயர்ந்த அளவிலான விழிப்புணர்ச்சியினாலும் இத்திட்டத்தின் செயல்பாடு முன்னேற்றம் பெற்றுள்ளது. இத்திட்டம் மிகப்பெரும் அளவிலான செலவினத்தைக் கொண்டிருந்ததன் விளைவாக நிதிப்பற்றாக்குறை உயர்ந்து விட்டதாக சில விமர்சகர்கள் நினைத்தாலும் இத்திட்டம் பிரபலமானதாகவே உள்ளது. ஒவ்வொரு ஆண்டும், கிராமப்புறங்களில் நான்கில் ஒரு குடும்பம் இத்திட்டத்தில் பங்கேற்கிறது.

தொழிலக வளர்ச்சி

பொருளாதார வளர்ச்சிக்கு விரைவான தொழில்துறை வளர்ச்சியை ஊக்குவிக்கும் யோசனைக்கு இந்தியா உறுதியளித்தது. பல்வேறு வழிகளின் மூலம் வளர்ச்சியை அடைய முடியும். இந்தியா போன்ற அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில், பலவகை கச்சாப் பொருட்கள் கிடைக்கின்ற அல்லது விளைகின்ற, அதிக உழைப்பு மிகுந்த செயலாக்க தொழில்களும் தொழில் துறை வளர்ச்சிக்கு வழிவகுத்தது. இதற்கு மாற்றான காந்தியின் மாதிரி கிராம வளர்ச்சிக்கும் முக்கியத்துவம் கொடுத்தது. குடிசைத் தொழில்களின் மூலம் நுகர்வுப் பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டால் அதுகிராமப்புற வறுமையையும் வேலையின்மையும் அகற்றும் எனும் கருத்தை முன்வைத்தது.

ஆனால் அரசு பல்வகைப்பட்ட தொழில்களின் முன்னேற்றத்திற்காக மிகப்பெரிய அளவிலான கனரகத் தொழில்களை உருவாக்குவதில் கவனம் செலுத்தும் நேருவின் மாதிரியைக் கைக்கொண்டது. சமதர்ம சமூகம் எனும் அடிப்படைக் கொள்கைக்கு ஏற்றவாறு அரசுக்குச் சொந்தமான தொழிற்சாலைகள் அடங்கிய தொழில்துறையை வளர்ப்பதில் அரசு பெரும்பங்கு வகிக்கும். எஃகு உற்பத்திக்காகவும், இடைப்பட்ட பொருட்களான இயந்திரங்கள், வேதியியல் பொருட்கள், உரங்கள் போன்றவற்றிற்காகவுமே அரசு கனரகத் தொழில்களின் வளர்ச்சிக்கு முக்கியத்துவமளித்தது. சுரண்டும் தன்மை கொண்டதாகவும், மிகுந்த லாப நோக்கம் கொண்டதாகவும் ஒரு சிறிய முதலாளிகள் வர்க்கத்திற்கு மட்டும் பயனளிக்கக் கூடியதாக உள்ள தனியார் முதலீட்டைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பதே இவ்வளர்ச்சி மாதிரியின் சமூக நோக்கமாகும்.

(அ) தொழிற்கொள்கை

இந்நோக்கங்களை மேம்படுத்துவதற்காக தொடர்ச்சியான தொழிற்கொள்கை அறிவிப்புகள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. முதல் கொள்கை அறிக்கை 1948இல் அறிவிக்கப்பட்டது. இது தொழிலகங்களை நான்கு வகைகளாகப் பிரித்தது.

1. போர்த்துறை சார்ந்த தொழிலகங்கள் அரசின் முற்றுமைகளாக இருக்கும் (அணுசக்தி, ரயில்வே, ஆயுதங்கள், ராணுவத் தளவாடங்கள்).
2. தேசிய முக்கியத்துவம் வாய்ந்த 18 தொழிலகங்கள் (கனரக இயந்திரங்கள், உரம், வீரியமிக்க ரசாயனங்கள், போர்க்கருவிகள், மற்றவை) அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும்.
3. பொதுத்துறை மற்றும் தனியார் துறை ஆகிய இரண்டிலும் இடம்பெறும் தொழிலகங்கள்.
4. தனியார்துறையைச் சேர்ந்த தொழிலகங்கள்.

1956இல் நிறைவேற்றப்பட்ட தொழில் கொள்கைத் தீர்மானமே மிகவும் உறுதியான கொள்கை அறிக்கையாகும். அது தொழிலகங்களை மூன்று வகைகளாகப் பிரித்தது. அட்டவணை அ வில் இடம்பெற்ற தொழிலகங்கள் அரசின் முற்றுரிமையின் கீழிருந்தன; அட்டவணை ஆ வில் இடம் பெற்ற தொழிலகங்கள் அரசு புதிய அலகுகளைத் தொடங்கலாம், ஆனால் தனியார் துறையினரும் தங்கள் அலகுகளை அமைக்கலாம் அல்லது விரிவாக்கலாம்; மீதமுள்ள தொழிலகங்கள் அட்டவணை ‘இ’ யில் இடம் பெற்றன.

1951இல் இயற்றப்பட்ட தொழில் வளர்ச்சி மற்றும் முறைப்படுத்துதல் சட்டம் தனியார் துறையைக் கட்டுப்படுத்துவதற்கு முக்கியமான கருவியாகும். இச்சட்டம் அரசிடமிருந்து உரிமம் பெறாமல் புதிய தொழிற்சாலைகள் நிறுவப்படக்கூடாது எனவும், இருக்கின்ற தொழிற்சாலைகளின் திறன் அதிகரிக்கப்படக் கூடாதெனவும் கட்டுப்பாடுகளை விதித்தது.

1973இல் வெளியிடப்பட்ட கொள்கை அறிக்கை, வளர்ச்சியில் காணப்படும் பிராந்திய ஏற்றத்தாழ்வுகளைப் போக்கும் நோக்கத்துடன் கிராமப்புறங்களிலும் பின்தங்கிய பகுதிகளிலும் செயல்படக்கூடிய பெரும் தொழில் நிறுவனங்களை ஊக்குவித்தது. 1977இல் வெளியான கொள்கை அறிக்கையானது சிறிது காலமே ஆட்சியிலிருந்த ஜனதா அரசாங்கத்தால் வடிவமைக்கப்பட்டது. அது ஊரக, கிராமப்புறங்களை மேம்படுத்துவதோடு சிறு தொழில்களின் வளர்ச்சியையும் குறிக்கோளாகக் கொண்டிருந்தது.

1980இல் காங்கிரஸ் அரசால் வெளியிடப்பட்ட கொள்கை அறிக்கையும் சமச்சீரான வளர்ச்சியைப் பேணுவதை இலக்காகக் கொண்டிருந்தது. மற்றபடி இந்த அறிக்கைகள் அனைத்தும் அரசுக்குச் சொந்தமான ஒரு வலுவான பொதுத்துறை மற்றும் தனியார் துறை மற்றும் குறிப்பாகப் பெரும் வணிக நிறுவனங்களின் மீதான கட்டுப்பாட்டைத் தொடர்ந்தன.

சந்தைப் பொருளாதாரத்தில் ஊடுருவிய பிற தலையீடுகளும் இருந்தன. தனியார் துறையில் தயாரிக்கப்படும் சிமெண்ட் போன்ற இடு பொருட்கள் பங்கீட்டு முறையின் (Ration) கீழ் கொண்டுவரப்பட்டன. தனிநபர்கள் வீடு கட்டுவதற்கும் அனுமதி பெற்றாக வேண்டியதிருந்தது. உரிமம் வழங்கல் கொள்கையின் கீழ் நுகர்பொருட்களின் உற்பத்தி கடுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டது. இது சமூகத்தில் வசதிமிக்கவர்கள், வசதியற்றவர்கள் ஆகியோரிடையே நுகர்விலுள்ள ஏற்றத்தாழ்வுகளை சமன்செய்யும் கருத்தியலின் வெளிப்பாடேயாகும். அதே சமயம் அரிதான மூலப்பொருட்களான எஃகு , சிமெண்ட் போன்றவை நீண்டகாலப் பொருளாதார வளர்ச்சிக்கு தேவைப்படும் போர்த்துறை சார்ந்த தொழில்களுக்குப் பயன்படுத்தப்படுவதை உறுதி செய்தது.

பல முக்கியத் தொழில்களும் சேவைகளும் தேசியமயமாக்கப்பட்டன. நிலக்கரிச் சுரங்கங்கள், பெட்ரோலிய நிறுவனங்கள், வங்கி மற்றும் ஆயுள் காப்பீட்டுச் சேவைகள் ஆகியன இதில் அடங்கும். அண்மைக் காலங்களில் தான் தனியாரும் இவ்வகையான நடவடிக்கைகளில் நுழைய அனுமதிக்கப்பட்டுள்ளனர்

(ஆ) பொதுத்துறை

1951இல் இந்தியாவில் ஐந்து பொதுத்துறை நிறுவனங்களே இருந்தன. 2012இல் இந்த எண்ணிக்கை 225ஆக உயர்ந்தது. 1951இல் ₹29 கோடியாக இருந்த மூலதன முதலீடு 2012இல் 7.3 லட்சம் கோடிகளாக உயர்ந்தது. கனரகத் தொழிலில் பொதுத்துறை நிறுவனங்கள் உருவாக்கப்படுவதை மீண்டும் இரு முக்கிய அம்சங்கள் தீர்மானித்தன. முதலாவதாக கருத்தியல் நிலையில், அரசாங்கம் ஒரு சமதர்ம வளர்ச்சிக்கு உறுதியளித்தது, இது பொருளாதாரத்தின் மீது அரசின் அதிகளவிலான கட்டுப்பாட்டை உள்ளடக்கியிருந்தது. ஆனால் இரண்டாவது நடைமுறை சார்ந்தது, நடைமுறையில் கனரகத் தொழில்களை உருவாக்க வேண்டிய பொறுப்பை அரசே ஏற்க வேண்டியதிருந்தது. ஏனெனில் அவற்றை உருவாக்க மிக அதிகமான முதலீடு தேவைப்பட்டது. மேலும் இத்திட்டங்கள் உற்பத்தியைத் தொடங்குவதற்கு பல ஆண்டுகள் கால அவகாசம் எடுத்துக்கொள்ளும், அதனால் இவைகள் “நீண்டகட்டுமான காலத்திட்டங்கள்” (long gestation) என்றழைக்கப்பட்டன.

1950களில் இப்படியான முதலீடுகளைச் செய்யும் அளவுக்கு வாய்ப்பு வசதியோ, விருப்பமோ தனியார் துறையிடமில்லை . பிலாய் (சத்தீஸ்கர்), ரூர்கேலா (ஒடிசா), துர்காபூர் (மேற்கு வங்காளம்), பொக்காரோ (ஜார்கண்ட்) ஆகிய இடங்களில் எஃகுத் தொழிற்சாலைகளும், 1950களில் இங்கிலாந்து, ஜெர்மனி மற்றும் ரஷ்யா போன்ற நாடுகளின் ஒத்துழைப்பு மற்றும் தொழில்நுட்ப உதவியோடு பாரத மிகு மின் நிறுவனம் (Bharat Heavy Electricals Limited – BHEL), ஹிந்துஸ்தான் மெஷின் ரூல்ஸ் போன்ற பொறியியல் தொழிற்சாலைகளும் நிறுவப்பெற்றன.

தொழில்துறை மற்றும் பொருளாதார வளர்ச்சியில் பிராந்திய ஏற்றதாழ்வுகளைக் குறைப்பதற்காக மூலப்பொருள் கிடைக்குமிடங்களுக்கு அருகில் இருக்க வேண்டிய தொழில் நிறுவனங்கள் பின்தங்கிய பகுதிகளில் அமைக்கப்பட்டன. பாரத மிகு மின் நிறுவனம் முதலில் போபாலில் நிறுவப்பட்டது. பின்னர் திருச்சிராப்பள்ளி, 

ஹைதராபாத், ஹரித்துவார் ஆகிய இடங்களிலும் நிறுவப்பெற்றது. இவ்வாறு எஃகுத் தொழிற்சாலைகள், ஒரிசா, பீகார் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களின் பின்தங்கிய பகுதிகளில் நிறுவப்பெற்றன. பொதுத்துறை நிறுவனங்கள் தேசியக் கருவூலத்திற்கு தனது பங்களிப்பை நல்கியதால் சிறுகச்சிறுக சேமிக்கப்பட்ட அவைகளின் லாபத்தில் ஒரு பகுதி மத்திய அரசுக்குச் சென்றது. இவ்வாறு பொதுத்துறையின் வளர்ச்சியானது நாட்டை தொழிற்திறன் கொண்டதாக உருவாக்கியதோடு பல சமூகப் பொருளாதாரத் தேவைகளையும் நிறைவு செய்தது.

(இ) பொதுத்துறை தொழில் நிறுவனங்களில் ஏற்பட்ட நெருக்கடிகள்

1991இல் பொதுத்துறை சார்ந்த தொழில் நிறுவனங்கள் கடுமையான பிரச்சனைகளைச் சந்தித்துக் கொண்டிருப்பது தெளிவானது. ஒட்டுமொத்தமாக அவர்கள் லாபத்தைக் காண்பிக்கும் போது, லாபத்தில் கிட்டத்தட்ட பாதி பெட்ரோலிய நிறுவனங்களால் வழங்கப்பட்டது. பல தொழிற்சாலைகள் தொடர்ந்து நஷ்டங்களை ஏற்படுத்தின. பிரச்சனையின் ஒரு பகுதி போர்த்துறை சாராத துறைகளான சுற்றுலா, தங்கும் விடுதிகள், நுகர்வுப் பொருட்கள் (எடுத்துக்காட்டாக 1970களில் தொலைக்காட்சிப் பெட்டிகள் பொதுத்துறை நிறுவனங்களால் மட்டுமே தயாரிக்கப்பட்டன) போன்ற துறைகளிலும் பொதுத்துறை விரிவடைவதால் ஏற்படுகிறது. 

பொதுத்துறை நிறுவனங்களின் செயல்பாட்டுக்கு பல்வேறு காரணிகளும் பங்களிப்பைச் செய்தன. நிறுவனங்கள் அமைக்கப்பட வேண்டிய இடங்கள் குறித்து மாறுபட்ட கருத்துகள் எழுந்தன. கட்டுமானப் பணிகளை முடிப்பதில் ஏற்படும் தாமதத்தால் செலவுகள் அதிகமாகி அதிக மூலதன முதலீட்டை ஏற்படுத்தின. நிர்வாகச் செலவுகள் அனைத்து நேரங்களிலும் கட்டுக்கடங்கி இருப்பதில்லை , பொதுத்துறை நிறுவனங்களால் உற்பத்தி செய்யப்படும் இடைநிலை பொருட்கள் தனியார் துறையில் உள்ளீடுகளாகப் பயன்படுத்தப்படும் போது அர்த்தமற்றதாகிறது. பொதுத்துறை நிறுவனங்களில் தேவைக்கு அதிகமானோர் பணியமர்த்தப்பட்டனர். கனரகத் தொழிற்சாலைகளின் தொழில் நுட்பத்திற்கு அவ்வளவு அதிகமான தொழிலாளர்கள் தேவையில்லை. இதனால் நிறுவனங்களை இயக்குவதற்கான செலவு அதிகரித்தது. இப்பிரச்சனைகள் அனைத்தையும் அங்கீகரித்த அரசு 1991இல் நஷ்டங்களை ஏற்படுத்தக்கூடிய மற்றும் போர்த்துறை சாராத நிறுவனங்களில் செய்யப்பட்ட முதலீடுகளைத் திரும்பப்பெறும் திட்டத்தைத் (Disinvestment Programme) தொடங்கியது.

அனைத்து குறைபாடுகளுக்கு மத்தியிலும், கனரகத் தொழில்களை நிறுவுவதன் மூலமும் நீண்டகாலத் தொழில்துறைத் திறனை வளர்ப்பதில் கவனம் செலுத்துவதன் மூலமும் தொழில்மயமாக்கும் செயல்திட்டமானது இந்தியாவை நவீன, தொழில் துறை பொருளாதார நாடாக மாற்றுவதில் வெற்றிகண்டுள்ளது.

(ஈ) தாராளமயமாக்கம் – தொழில் கொள்கை அறிக்கை 1991

இறுதியாக 1991இல் இந்திய அரசு தன்னுடைய தொழில் கொள்கையில் ஒரு மாற்றத்தை அறிவித்தது. அது உரிமங்கள் வழங்கப்படுவதிலுள்ள கட்டுப்பாடுகளை நீக்குவதாகவும், தாராளமயமாக்கப்பட்ட பொருளாதாரத்தை நோக்கி நகர்வதாகவும், தனியார் துறையின் அதிகமான பங்கேற்பை அனுமதிப்பதாகவும் அமைந்தது. செயல்படாத தொழிற்சாலைகளை மூடுதல், முதலீட்டைத் திரும்பப்பெறும் கொள்கை ஆகியவற்றின் மூலம் பொதுத்துறையின் பங்கு குறைக்கப்பட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதனால் நாட்டில் பொருளாதாரம் குறித்த மனப்போக்கில் குறிப்பாக நுகர்வோரின் கண்ணோட்டத்தில் மிகப்பெரும் மாற்றம் உருவாயிற்று. பொருட்களும் சேவைகளும் கிடைப்பதன் மூலம், வளர்ந்து வரும் மத்தியதர வர்க்கம் ஆசைப்பட்ட உயர்ந்த வாழ்க்கைத்தரம் கிட்டியது என்பது மட்டுமல்லாமல் இப்போது குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களாலும் கூட அப்பொருட்களை வாங்க முடிந்தது.

நேர்மறை கோணத்தில், தாராளமயமானது இந்தியாவை மிக அதிகமாக அந்நிய நாடுகளின் முதலீட்டினை ஈர்க்கும் இடமாக மாற்றியுள்ளது. மாநில அரசுகள் தொழில் செய்வதை எளிதாக்கும் வகையில் கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதாக விளம்பரம் செய்வதில் ஆர்வமாக உள்ளன. இவையனைத்தும் ஒரு செல்வச்செழிப்பான பொதுச்சூழலை ஏற்படுத்தியுள்ளது. ஒட்டுமொத்தப் பொருளாதாரம் குறித்த புள்ளி விவரங்களில் அது பிரதிபலிக்கின்றது.

எதிர்மறை விளைவுகளெனில் தாரளமயமாக்கலும் உலகமயமாக்கலும் அதிக ஊதியம் பெறுவோர்க்கும் குறைந்த ஊதியம் பெறுவோர்க்கும் இடையிலான ஊதிய ஏற்றதாழ்வுகளை அதிகரித்துள்ளது. பெரும் நிறுவனங்களில் ஊதிய உச்ச வரம்புகள் நீக்கப்பட்டுவிட்டதால், அந்நிறுவனங்களில் ஊதியம் பெறும் அதிகாரிகளுக்கும் குறைந்த ஊதியம் பெறுவோர்க்குமான ஏற்றத்தாழ்வுகள் விரிவடைந்துள்ளன. முறை சார்ந்த தொழில்களில் புதிய வேலைகளுக்கான வாய்ப்பு மிகக் குறைவாகவே உள்ளது. அப்படியான வாய்ப்புகள் முறைசாராத் தொழில்களில் அதிகம் உருவாகின்றன. அத்துடன் இவ்விரு துறைகளுக்குமிடையிலான ஏற்ற தாழ்வுகளும் அதிகரித்துவிட்டன.

இருந்தபோதிலும் தாராளமயமாக்கலின் அளவானது, சுதந்திரப் பொருளாதாரத்தை ஆதரிப்போர் மற்றும் இடதுசாரிப் பொருளாதார நிபுணர்கள் ஆகிய இரு சாராருக்கும் மகிழ்ச்சியளிக்கவில்லை . முன்னேற்றப் பாதையில் இன்னமும் இருந்து கொண்டிருக்கும் தடைகளையும் ஏற்றதாழ்வையும் ஒழிப்பதற்காகச் சந்தை சக்திகளுக்கு மேலும் சுதந்திரம் வழங்கப்பட வேண்டுமென சுதந்திரப் பொருளாதாரத்தை ஆதரிப்போர் கூறுகின்றனர். தனியாருக்கு சுதந்திரம் வழங்கியதன் மூலம், சமூக நீதியையும் மக்கள் நலத்தையும் உறுதிப்படுத்தி, முன்னேற்ற வேண்டிய தனது பொறுப்பிலிருந்து அரசு விலகிக்கொண்டதாக சில பொருளாதார நிபுணர்கள் கவலை தெரிவித்தனர்.

ஐந்தாண்டு திட்டங்கள்

ஐந்தாண்டு திட்டங்களின் மூலமாக வளர்ச்சிக்குத் திட்டமிடுவதில் இந்தியா சோவியத் யூனியனின் முன்னுதாரணத்தைப் பின்பற்றியது. பொருளாதாரத்தை வளர்ப்பதற்கான திட்டங்களை வடிவமைப்பதற்காக 1950இல் திட்டக் குழு (Planning Commission) நிறுவப்பெற்றது. ஒவ்வொரு திட்டமும் பொருளாதாரத்தின் செயல்பாடுகளையும், எதிர்கால வளர்ச்சிக்கு கிடைக்கப்பெறும் மூலவளங்களையும் மதிப்பீடு செய்தது. அரசாங்கத்தின் முன்னுரிமைகளுக்கு ஏற்றவாறு இலக்குகள் நிர்ணயம் செய்யப்பட்டன. வேளாண்மை, தொழிலகம், ஆற்றல், சமூகத்துறைகள் மற்றும் தொழில்நுட்பம் மற்றும் முழுமையான பொருளாதார வளர்ச்சியை குறிக்கோளாகக் கொண்டு பல்வேறு துறைகளுக்கு நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டன. தன்னிறைவுப் பொருளாதாரத்தை உருவாக்குவது திட்டமிடுதலின் அடிப்படை நோக்கங்களில் ஒன்றாக இருந்தது .

1951-56 வரையிலான காலப்பகுதி முதலாவது ஐந்தாண்டு திட்டத்திற்கானது. இதுவரையிலும் பன்னிரண்டு ஐந்தாண்டு திட்டங்கள் நிறைவேறியுள்ளன. இவை தவிர 1966-1969 வரை மூன்று ஓராண்டு திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.

ஒரு திட்டத்திற்காக முன்மொழியப்பட்ட முதலீடு, பொதுத்துறை, தனியார் துறை ஆகிய இரு துறைகளுக்குமான முதலீடுகளைக் கணக்கில் எடுத்துக்கொண்டது. முதலாவது ஐந்தாண்டு திட்டத்திற்காக முன்மொழியப்பட்ட மொத்த முதலீடு ₹3870 கோடிகளாகும். பதினொன்றாவது ஐந்தாண்டு திட்டத்தில் இது 36.44 லட்சம் கோடிகளைத் தாண்டியது. அறுபது வருடங்களுக்குக் குறைவான காலப் பகுதியில் இந்தியப் பொருளாதாரம் எந்த அளவிற்கு வளர்ந்துள்ளது என்பதை இது சுட்டிக்காட்டுகிறது. இரண்டாவது மற்றும் ஆறாவது ஐந்தாண்டு திட்டங்களுக்கும் இடைப்பட்ட காலத்தில் மொத்தத் திட்ட முதலீடுகளில் பொதுத்துறையின் பங்கு 60 முதல் 70 விழுக்காடு வரை இருந்தது. அதன் பின்னர் பொதுத்துறையின் பங்கு படிப்படியாகக் குறைந்து மொத்தத் திட்ட முதலீட்டில் தனியார் துறை ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியது.

முதலாவது ஐந்தாண்டு திட்டம் (1951-56) வேளாண்மையை வளர்ப்பதிலும் குறிப்பாக வேளாண் உற்பத்தியிலும் கவனம் செலுத்தியது. மொத்த முதலீட்டில் 31 விழுக்காடுகள் வேளாண்மைக்கும் நீர்பாசனத்திற்கும் ஒதுக்கப்பட்டது. இதற்குப் பின்னர் தொழில் துறைக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டது. மொத்த முதலீட்டில் வேளாண்மைக்கான பங்கு 20 விழுக்காட்டிற்கும் 24 விழுக்காட்டிற்கும் இடையே இருந்தது. பதினோறாவது ஐந்தாண்டு திட்டத்தில் இது 20 விழுக்காட்டிற்கும் குறைவாக இருந்தது. பொதுவாக மகலனோபிஸ் திட்டம் என அறியப்பட்ட இரண்டாவது ஐந்தாண்டு திட்டம் (1956-61) பொருளாதார முன்னேற்றத்தை அடைவதற்கு கனரகத் தொழிற்சாலைகளுக்கு முக்கியத்துவம் வழங்கியது. முதலாவது திட்டத்தில் 6 விழுக்காடாக இருந்த தொழில் துறையின் பங்கு இரண்டாவது திட்டத்திற்குப் பின்னர் 24 விழுக்காடாக உயர்ந்தது. ஆனால் இப்பங்கு ஆறாவது திட்டகாலம் முதல் குறைந்துகொண்டு வருகிறது. ஒருவேளை பொதுத் துறையில்  செய்யப்பட வேண்டிய முக்கிய முதலீடுகள் நிறைவு பெற்றிருக்கலாம். எரிபொருள் மின்சக்திக்கான முதலீட்டு ஒதுக்கீடு முதல் நான்கு திட்டங்களில் மிகக் குறைவாக இருந்தது. இதனால் நாட்டில் பெருமளவு மின்சாரத் தட்டுப்பாடு ஏற்பட்டது.

முதலிரண்டு திட்டங்களும் ஓரளவிற்கு மிதமான 4 விழுக்காடு வளர்ச்சியை இலக்காகக் கொண்டிருந்தன. இதைப் பொருளாதார நிபுணர்கள் இந்து வளர்ச்சி விகிதம் என அழைத்தனர். இந்த வளர்ச்சி விகிதங்கள் அடையப்பட்டதால் அவை வெற்றிபெற்ற திட்டங்களாகக் கருதப்பட்டன. பின் வந்த திட்டங்களில் பல்வேறு காரணங்களால் நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை அடைய இயலவில்லை. நான்காவது திட்டத்திலிருந்து (1969-74) வறுமை ஒழிப்பிற்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டது. இதனால் திட்டமிடும் செயல்பாட்டில், சமூக நோக்கங்களும் இணைக்கப்பட்டன. ஆறாவது திட்டகாலத்திலிருந்து நிர்ணயிக்கப்பட்ட வளர்ச்சி இலக்குகள் அடையப்பட்டன.

எட்டாவது திட்ட காலத்தில் (1992-97) பொருளாதாரம் தாராளமயமாக்கப்பட்டது. அப்போதிருந்து வளர்ச்சி விகிதமானது 7 விழுக்காடுகளுக்கு அதிகமாகவேயுள்ளது. (ஒன்பதாவது திட்ட காலத்தில் ஏற்பட்ட சுணக்கம் நீங்கலாக) அனைவரையும் உள்ளடக்கிய, நியாயத்துடன் கூடிய, நீண்டகால வளர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டு வருகிறது.

இந்தியாவில் ஐந்தாண்டு திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து நேர்மறை மற்றும் எதிர்மறையான மதிப்பீடுகளும் உள்ளன.

சாதனைகள்

1. பொருளாதாரத்தை விரிவுபடுத்துதல்
2. தேசிய வருமானத்திலும் தனிநபர் வருமானத்திலும் குறிப்பிடத்தகுந்த வளர்ச்சி
3. தொழிற்சாலைகளின் உற்பத்தி அதிகரிப்பு
4.வேளாண்மையில் நவீன இடுபொருட்களைப் பயன்படுத்துவது அதிகரித்ததுடன் வேளாண் உற்பத்தியும் அதிகரித்தது
5. அதிக அளவில் பன்முகப்படுத்தப்பட்டப் பொருளாதாரம்

1951ஆம் ஆண்டு முதல் உங்களுக்குத் 2017ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் பன்னிரெண்டு தெரியுமா? ஐந்தாண்டு திட்டங்கள் செயல்படுத்தபட்டுள்ளன. இதில் பன்னிரெண்டாவது ஐந்தாண்டு திட்டமே (2012-2017) இறுதியான திட்டமாகும். 2015இல் திட்டக் குழு கலைக்கப்பட்டு அதற்குப் பதிலாக நிதி ஆயோக் (NITI Aayog) எனும் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

கல்வி, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

கல்வி

கல்வி மற்றும் சுகாதாரம் ஆகியவை சமூகத் துறையில் இடம் பெற்றிருப்பதோடு கல்வியின் நிலையும் சுகாதாரக் குறிப்பான்களுமே (Indicators) ஒரு நாட்டின் சமூக வளர்ச்சியை மதிப்பிடுவதற்கான அளவுகோல்களாக உள்ளன. இந்தியாவில் 1951இல் 18.3 விழுக்காட்டிலிருந்த எழுத்தறிவு நிலை 2011இல் 74 விழுக்காடாக உயர்ந்துள்ளது. ஆண்களில் 82 விழுக்காட்டினரும் பெண்களில் 65 விழுக்காட்டினரும் எழுத்தறிவு பெற்றுள்ளனர். ஒப்பிட்டுப் பார்க்கையில் எழுத்தறிவில் பெண்கள் பின்தங்கியிருந்தனர். தொடக்கக் கல்வி முதல் உயர்நிலைப் பள்ளி வரையிலான பள்ளிகளின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்தது. மேற்படிப்பு மையங்களின் எண்ணிக்கையும் பெருகிற்று. 2014-15இல் நாட்டில் 12.72 லட்சம் தொடக்க , உயர் தொடக்கப் பள்ளிகளும் 2.45 லட்சம் இடைநிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளும், 38,498 கல்லூரிகளும், 43 மத்தியப் பல்கலைக்கழகங்களும், 316 மாநிலப் பல்கலைக்கழகங்களும் 122 நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களும் 181 மாநில தனியார் பல்கலைக்கழகங்களும் செயல்பட்டன. 

நகர மற்றும் கிராமப்புறங்களில் இடைநிற்கும் குழந்தைகள் பெரும்பாலும் ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்தோராகவே இருந்தனர். குறிப்பாகப் பெண் குழந்தைகளே இடைநிற்றலில் அதிகமாக இருந்தனர். சேர்க்கை விகிதத்திலும், இடைநிற்றல் விகிதத்திலும் மிகப்பெரும் பிராந்திய வேறுபாடுகள் காணப்பட்டன. ஆகவே பின்தங்கிய மாநிலங்களிலும், பகுதிகளிலும் பள்ளிக் கல்வியின் நிலை மோசமாகவே இருந்தது. இடைநிற்றல் பிரச்சனையை தீர்க்க அரசாங்கத்தினால், அனைவருக்கும் கல்வித் திட்டம் (சர்வ சிக்ஷா அபியான்-SSA), அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம் (ராஷ்ட்ரிய மத்யமிக் சிக்ஷா அபியான்-RMSA) மற்றும் அண்மையில் ஒருங்கிணைக்கப்பட்ட திட்டமான ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டம் (சமக்ர சிக்ஷா அபியான்) போன்றவற்றின் மூலம் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. 

அறிவியல் தொழில்நுட்பம்

இந்தியா, அறிவியல் ஆய்வு மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களை வளர்த்தெடுப்பதில் பல முன்னேற்றங்களை எட்டியுள்ளது. விடுதலைக்கு முன்னர் இந்தியாவிலிருந்த ஒரேயொரு அறிவியல் ஆய்வு நிறுவனம் 1909இல் J.R.D. டாட்டா மற்றும் மைசூர் மகாராஜா ஆகியோரின் நிதியுதவியில் பெங்களூருவில் அமைக்கப்பட்ட இந்திய அறிவியல் நிறுவனம் (Indian Instititute of Science – IISc) மட்டுமேயாகும்.

1945இல் முனைவர் ஹோமி J. பாபா என்பாரின் முன்னெடுப்பில், டாட்டா என்பவரின் நிதியுதவியுடன் டாட்டா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனம் (Tata Institute of Fundamental Research — TIFR) நிறுவப்பெற்றது. கணிதம் மற்றும் அறிவியல் ஆகிய துறைகளில் ஆய்வுகளை ஊக்குவிப்பதற்காக இது அமைக்கப்பட்டது. புனேயில் அமைக்கப்பட்ட தேசிய வேதியியல் ஆய்வகம் (National Chemical Laboratory), புதுதில்லியில் அமைக்கப்பட்ட தேசிய இயற்பியல் ஆய்வ கம் (National Physics Laboratory) ஆகியவை நாடு விடுதலை பெற்ற காலத்தில் முதன் முதலாக அமைக்கப்பட்டவை ஆகும். அது முதலாக அறிவியல் துறையின் வானியற்பியல் (astrophysics), மண்ணியல் (geology) / நிலவியல் சார் இயற்பியல் (geo-physics), உயிரணு மற்றும் மூலக்கூறு உயிரியல் (cellular and molecular biology), கணித அறிவியல்கள் (mathametical sciences) மற்றும் பல பிரிவுகளில் ஆய்வினை மேற்கொள்ளும் நிறுவனங்களின் எண்ணிக்கை தொடர்ந்து பெருகின.

அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றம் (Council of Scientific and Industrial Research – CSIR) எனும் ஒரு குடையின் கீழ் பெரும்பாலான ஆய்வு நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இவ்வமைப்பு (CSIR) பயன்பாட்டு அறிவியல் (Applied sciences) களங்களான இயந்திரங்கள், மருந்துகள், விமானங்கள் ஆகியவை குறித்த மேம்பட்ட ஆய்வினை முன்னெடுக்கிறது.

அணுசக்தி ஆணையமானது அணு அறிவியலின் வளர்ச்சிக்கு மைய முகமையாகத் (nodal agency) திகழ்கிறது. அணுசக்தி உற்பத்தி அணு ஆயுத உற்பத்தி ஆகிய இரண்டின் மீதும் கவனம் செலுத்தும். அது போர்த்திறம் சார்ந்த முக்கியத்துவம் பெற்றதாகும். அறிவியல் சார்ந்த ஆய்வுகளுக்காக பல நிறுவனங்களுக்கு அணுசக்தி ஆயம் நிதியளிக்கிறது.

ஆய்வும் வளர்ச்சியும் குறிப்பிட்டுச் சொல்லும்படி விரிவடைந்திருக்கும் மற்றொரு துறை வேளாண்மை ஆகும். இத்துறையில் நடைபெறும் ஆய்வுகளை இந்திய வேளாண் ஆய்வுக் கழகம் (Indian Council of Agricultural Research – ICAR) ஒருங்கிணைக்கிறது. இதன் ஆய்வுகள், அடிப்படை வேளாண்மை குறித்து மட்டுமல்லாமல், துணை நடவடிக்கைகளாக மீன்வளர்ப்பு, வனங்கள், பால்வளம், தாவர மரபியல், உயிரி – தொழில்நுட்பம், பல்வேறு பயிர் வகைகளான நெல், உருளைக்கிழங்கு, கிழங்கு வகைகள், பழங்கள் மற்றும் பூச்சிகளைக் கட்டுப்படுத்துதல் ஆகிய நடவடிக்கைகளையும் இவ்வமைப்பு மேற்கொள்கிறது. வேளாண் பல்கலைக்கழகங்களும் கல்வி கற்பித்தல், வேளாண் நடைமுறைகள் குறித்த ஆய்வு ஆகியவற்றில் செயலூக்கத்துடன் ஈடுபட்டுள்ளன. இந்தியாவில் 67 வேளாண்மைப் பல்கலைக்கழகங்கள் உள்ளன. இவற்றில் 3 பல்கலைக்கழகங்கள் தமிழகத்தில் அமைந்துள்ளன.

இந்தியத் தொழில்நுட்ப நிறுவனங்கள் (Indian Institute of Technology – IITs) பொறியியலின் வெவ்வேறு பிரிவுகளுக்காக நிறுவப்பெற்ற சிறப்பு நிறுவனங்களாகும். முதல் IIT கரக்பூரில் நிறுவப்பெற்றது. தொடர்ந்து டெல்லி, பம்பாய், கான்பூர் மற்றும் சென்னை ஆகிய இடங்களில் உருவாக்கப்பட்டன. தற்சமயம் நமது நாட்டில் 23 IITகள் செயல்படுகின்றது. இவையல்லாமல் 31 தேசியத் தொழில் நுட்ப நிறுவனங்க ளும் (National Institute of Technology – NIT), 23 இந்திய தகவல் தொழில் நுட்ப நிறுவனங்க ளும் (Indian Institutes of Information Technology – IIIT) செயல்பட்டு வருகின்றன. 

இத்தகைய முன்னேற்றங்கள் ஏற்பட்டிருந்தாலும் இந்தியாவில் அறிவியல் ஆய்வானது வளர்ந்த நாடுகள் மற்றும் சீனா அடைந்துள்ள முன்னேற்றங்களை எட்டிப்பிடிக்க இன்னும் நீண்ட தூரம் பயணம் செய்தாக வேண்டுமென்பது பொதுவான கருத்தாகும். நாட்டில் அறிவியல் ஆய்வு நிறுவனங்கள் பல இருந்தும் கோட்பாட்டுக் கருத்துக் களத்தில் ஆய்வுப் பங்களிப்பு ஏமாற்றத்தை அளிப்பதாகவும் அரிதாகவும் உள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *